தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளின் இடைதேர்தலை நடத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தேர்தலுக்கான கால அட்டவணை எதுவும் இருப்பின் அதனை பதில் மனுவாகத் தாக்கல் செய்யவும் தமிழக தேர்தல் ஆணையருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளன. உயர் நீதிமன்ற உத்தரவு மற்றும் தேர்தல் விதிமுறைப்படி சட்டப்பேரவை தொகுதி காலியாக உள்ளது என அறிவிக்கபட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் விதிகளில் உள்ளது.
ஆனால், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தலைமைச் செயலர் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். வடகிழக்குப் பருவமழை காலத்தில் அதிக மழைப்பொழிவுக்கு வாய்ப்பிருப்பதால் இரண்டு தொகுதிகளிலும் இடைதேர்தலை தற்போது நடத்த வேண்டாம் எனப் பரிந்துரை செய்திருந்தார். இது ஏற்கக்கூடிய காரணம் இல்லை.
மறைந்த திருப்பரங்குன்றம் முன்னாள் எம்எல்ஏ போஸ் வெற்றி பெற்றது செல்லாது என அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால் போஸ் உயிரிழந்துவிட்டார். இதனாலும் தேர்தலைத் தள்ளிவைக்க முடியாது.
இந்நிலையில், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது இரண்டு தொகுதிகளிலும் இடைதேர்தலை நடத்தினால் தேர்தல் முடிவுகள் அரசியல் கட்சிகளுக்கிடையே ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதால் தமிழக அரசு இடைதேர்தலை நடத்த ஆர்வம் காட்டவில்லை.
தேர்தல் விதிமுறையின்படி சட்டப்பேரவை தொகுதி காலியாக உள்ளது என அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்ற விதிமுறையை அமல்படுத்தும் விதமாக திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை இன்று (புதன்கிழமை) விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் தேர்தலுக்கான கால அட்டவணை எதுவும் இருப்பின் அதனை பதில் மனுவாக தாக்கல் செய்யவும் தமிழக தேர்தல் ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.