தமிழகம்

லாரி மீது கார் மோதி விபத்து: கணவரின் சடலத்தைப் பின்தொடர்ந்து சென்ற மனைவியும், மகனும் பலி

என்.முருகவேல்

சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குளானதில் கணவரின் சடலத்தைப் பின்தொடர்ந்து சென்ற மனைவியும், மகனும் உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டம் நாச்சிக்குறிச்சியைச் சேர்ந்த பாபு என்பவர் சென்னை சிட்லபாக்கத்தில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர் உடல்நிலை சரியில்லாமல் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை சொந்த ஊர் கொண்டு செல்வதற்காக ஆம்புலன்ஸில் திருச்சி நோக்கி கொண்டு சென்றனர். ஆம்புலன்ஸைப் பின்தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் மனைவி ராதா (45), மகன் அம்பரீஷ் (22), தாய் தங்கம் (70) மகள் சோனியா (25) ஆகியோர் மற்றொரு காரில் பின் தொடர்ந்து சென்றனர்.

அப்போது கார் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த எடைக்கல் எனுமிடத்தில் செல்லும்போது, சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ராதா, அம்பரீஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் அவரது தாய் தங்கம், மகள் சோனியா, சிட்லபாக்கத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கோகுல், லாரியை பழுது பார்த்துக் கொண்டிருந்த மெக்கானிக் சந்திரபாபு ஆகியோர் காயமடைந்தனர்.

தகவலறிந்த எடைக்கல் போலீஸார், சம்பவ இடத்திற்குச் சென்று, காயம்பட்டவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த எடைக்கல் போலீஸார் சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கணவரின் சடலத்தைப் பின்தொடர்ந்து சென்ற மனைவியும், மகனும் விபத்தில் இறந்தது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT