எழும்பூருக்கு ரயில் மூலம் ஜோத்பூரிலிருந்து கொண்டுவரப்பட்டது நாய் இறைச்சி அல்ல, ஆட்டிறைச்சிதான் என கால்நடை மருத்துவமனை ஆய்வில் தெரியவந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் 21 பார்சல்களில் பதப்படுத்தப்படாத கெட்டுப்போன இறைச்சி 2,190 கிலோ பார்சல் மூலம் வந்தது. மீன் என்று புக் செய்யப்பட்டு வந்த அந்த தெர்மோகோல் பெட்டிக்குள் ஆட்டிறைச்சி இருந்தது.
இறைச்சியின் தன்மை, எலும்புகள் மற்றும் வாலின் அமைப்பு ஆகியவற்றைக் கொண்டு அவை நாய் இறைச்சியாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் எழுப்பினர். பின்னர் அது ஆட்டிறைச்சியா? நாய் இறைச்சியா? என்பதை அறிய காலநடை மருத்துவமனைக்கு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் நான்கு நாட்களாக உரிய குளிரூட்டப்படாமல் வந்ததால் இறைச்சி கெட்டுப்போனதாக தெரிவித்த உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அவற்றை சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவை கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.
ரயில் நிலையத்தில் பிரியாணி வியாபாரிகள் நூற்றுக்கணக்கில் வந்து அது ஆட்டிறைச்சிதான் என்று பேட்டி அளித்தனர். அது ஒருவகையான நீள வாலுடைய ஆடு என தெரிவித்தனர். பெறுநர் முகவரி ஏன் இல்லை, மீன் என்று ஏன் எழுதி பார்சல் புக் செய்யப்பட்டுள்ளது ஏன் என்கிற கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை.
இந்நிலையில் ஜோத்பூரிலிருந்து மீன் எனக் குறிப்பிட்டு 2,190 கிலோ இறைச்சியை அனுப்பியது யார்? அதற்கு பெறுநர் விலாசம் ஏன் இல்லை, என்பது குறித்து விசாரணை நடத்த ரயில்வே பாதுகாப்பு படை முதன்மை ஆணையர் லூயிஸ் அமுதன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை ஜோத்பூருக்குச் சென்றது.
ஜோத்பூரில் இருந்து அனுப்பும்போது மீன் பார்சல்கள் என்று கூறி அனுப்பியுள்ளனர். அதனால் அனுப்பிய நபரின் முகவரி ஜோத்பூரில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதன் அடிப்படையில் இறைச்சி பார்சல்களை மீன் பார்சல்கள் என்று அனுப்பிய நபரைத் தேடி இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படையினர் ஜோத்பூருக்குச் சென்றுள்ளதாகக் கூறப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகள், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது. இந்நிலையில் ஆய்வு முடிவை வெளியிட்டுள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ரயிலில் பறிமுதல் செய்யப்பட்டது நாய்க்கறி அல்ல, ஆட்டுக்கறி தான் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் பார்சலை மீன் என புக் செய்த புக்கிங் ஏஜெண்ட் கணேசன் மற்றும் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஜெய்சங்கர் ஆகியோர் மீது, ரயில்வே சட்டம் 1989 பிரிவு 163, 145 பி ஆகிய இரு பிரிவுகளின் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதில் ஜெய்சங்கரை போலீஸார் கைது செய்துள்ளனர், கணேசன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். ரயில்வே சட்டத்தை மீறி பார்சல் பதிவு செய்பவர்கள், பார்சல் அனுப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே போலீஸார் எச்சரித்துள்ளனர்.