வண்ணிக் கண்மாய் கரையில் கண்டறியப்பட்ட 13-ம் நூற்றாண்டு கல்வெட்டு.
திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டறியப்பட்டது.
திருப்பத்தூர் அருகே காரையூர் புதுவளவில் உள்ள வண்ணி கண்மாய் கரையில் இருந்த கல்வெட்டை சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் காளிராசா, செயலர் நரசிம்மன், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி வரலாற்று இணைப் பேராசிரியர் வேலாயுதராஜா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: திருப்பத்தூர் அருகே கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு 2 அடி நீளம் கொண்டது. மொத்தம் ஏழு வரிகள் உள்ளன. நிறைவடையும் இடத்தில் ஒரு பூரண கும்பமும், அதன் இரு பக்கமும் குத்துவிளக்குகளும் காணப்படுகின்றன. எழுத்தமைதி மூலம் இக்கல்வெட்டு 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என அறிய முடிகிறது.
கல்வெட்டுச் செய்தி மூலம், வண்ணக்க நல்லூர் என்ற இப்பகுதியில் உள்ள குளக்கரையில் வாழ்ந்த சீயர் (வைணவ ஆச்சாரியார்) மக்களுக்கு நல்வாழ்வுக்கான வேத நெறியை கற்பித்து பாதுகாத்து வந்துள்ளார் என்பதை அறிய முடிகிறது. மேலும், இப்பகுதியில் உள்ள அழகிய மணவாளப் பெருமாள் கோயிலில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆகியோரது கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அதிலும் வண்ணக்க நல்லூர் எனும் பெயர் இடம் பெற்றுள்ளது.
கல்வெட்டு கிடைத்த கண்மாயை வண்ணிக் கண்மாய் என்றும், அருகேயுள்ள அய்யனார் கோயில் வன்னிகுன்னி அய்யனார் என்றும் அழைக்கின்றனர். இதன்மூலம், இப்பகுதி வண்ணக்க நல்லூர் என்று அழைக்கப்பட்டிருப்பதை அறியலாம். தமிழகம் முழுவதும் கிராமங்களில் காவல் தெய்வமாக உள்ள அய்யனார், பூரணா, புஷ்பகலா ஆகிய தேவியருடனும் காட்சியளிப்பது வழக்கம். ஆனால், இங்குள்ள அய்யனார் தேவியர் இன்றி தனித்து உத்குடி ஆசனத்தில் (அமர்ந்த நிலை) கம்பீரமாக வீற்றிருக்கிறார்.
இரண்டு யானை வாகனங்கள் உள்ளன. அய்யனார் சிற்பத்தின் தலையில் ஜடாபாரம், நெற்றியில் கண்ணி மாலை, மார்பில் சன்னவீரம், காதுகளில் மகர குண்டலங்கள், மார்பில் உதரபந்தம் ஆகியவற்றுடன் வலது கையில் செண்டை ஏந்தியுள்ளார். இடது கரம் தண்ட ஹஸ்தத்தில் அமைந்துள்ளது. அய்யனார் சிற்பம் 12 அல்லது 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.