தமிழகம்

மெரினா அண்ணா சதுக்கத்தில் உடல் அடக்க இடம்: துரைமுருகன் நேரில் ஆய்வு

செய்திப்பிரிவு

நீதிமன்ற தீர்ப்பை அடுத்து மெரினா கடற்கரை அண்ணா சமாதியில் துரைமுருகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

திமுக தலைவர் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய திமுக சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்து காந்தி மண்டபத்தில் இடம் ஒதுக்கியது. இதை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டு நேற்றிரவு முழுதும் நடந்த வாதம் காலையிலும் தொடர்ந்தது.

பின்னர் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதைக்கேட்ட ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கண்ணீர் வடித்தனர்.

இந்நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அடக்கம் செய்யும் இடத்தை பார்வையிட்டு அதற்கான இடத்தை தேர்வு செய்ய துரைமுருகன், எ.வ வேலு உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் அண்ணா சதுக்கம் அமைந்துள்ள பகுதியில் ஆய்வு நடத்தினர்.

அவர்களுடன் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளும் ஆய்வில் கலந்துக்கொண்டனர். இன்று மாலை 5 மணி அளவில் உடல் அடக்கம் நடக்க உள்ளது. அதற்கு முன்னர் அண்ணா சதுக்கம் இடம் தயார் செய்யவேண்டிய அவசரத்தில் அதிகாரிகள் உள்ளனர். உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அண்ணா சதுக்கத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியின் உடல் அடக்கம் அண்ணா சதுக்கம் பின்புறம் அவர் சமாதிக்கு அருகிலேயே அடக்கம் செய்யப்படுகிறது.

SCROLL FOR NEXT