தமிழகம்

அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கு விடுப்பு நாட்களை பணிக்காலமாக கருதலாம் - உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

பயிற்சி கால நிறைவு, பதவி உயர்வுக்கு மகப்பேறு கால விடுப்பையும் பணிக்காலமாக கருத வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியில் வட்டாட்சியராக பணிபுரிந்து வருபவர் எஸ்.ரேணுகா. இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த 2001-ல் வருவாய் உதவியாளராக பணியில் சேர்ந்தேன். எனது பெயர் 2007, 2008-ம் ஆண்டுக்கான துணை வட்டாட்சியர் பதவி உயர்வு பட்டியலில் சேர்க்கப்படவில்லை. அதுபற்றி உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, பதவி உயர்வு பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு தகுதியான, உரிய நேரத்தில் ஐந்தாண்டு பயிற்சி காலத்தை பூர்த்தி செய்யவில்லை என்றனர்.

மகப்பேறு விடுப்பில் சென்றதால் குறிப்பிட்ட நேரத்தில் 5 ஆண்டு பயிற்சி காலத்தை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை. மகப்பேறு விடுப்பு காலத்தையும் பணிக்காலமாக கருதி பதவி உயர்வு மற்றும் பணப்பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

பணி நிபந்தனைகள் சட்டம்

இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சு.விஸ்வலிங்கம் வாதிட்டார். அப்போது, ‘அரசு ஊழியர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016-ல் அரசு ஊழியர்கள் விடுமுறையில் செல்வது அவர் களின் பதவி உயர்வுக்கு ஒரு தடையல்ல எனக் கூறப்பட்டுள்ளது’ என்றார்.

சட்டத்தில் இடமுண்டு

வழக்கின் விசாரணைக்கு பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:

அரசு ஊழியர்கள் 5 ஆண்டு பயிற்சி காலத்தை நிறைவு செய்ய வும், பதவி உயர்வு மற்றும் சலுகைகள் வழங்கும்போதும் அவர்களின் விடுமுறை காலத்தையும் பணிக் காலமாக கருத வேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதே சட்டத்தை பின்பற்றி ஒருவருக்கு பதவி உயர்வு வழங்க வருவாய் நிர்வாகத்துறை முதன்மைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் மனுதாரர் கோரிக்கையை ஏற்பதில் அரசு வழக்கறிஞர் முரண்பட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

மனுதாரரின் பெயரை 2008-ம் ஆண்டில் துணை வட்டாட்சியர் பதவி உயர்வு பட்டியலில் சேர்த்து 6 வாரத்தில், பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் பணப்பலன்கள் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்

SCROLL FOR NEXT