தமிழகம்

“ஜெயலலிதா மன்னிக்கும் தன்மை கொண்டவர்” - கோபியில் செங்கோட்டையன் பேட்டி

கி.பார்த்திபன்

ஈரோடு: ஜெயலலிதா மன்னிக்கும் தன்மை படைத்தவர். உழைப்பவர்களை எவராலும் வீழ்த்த முடியாது என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இன்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுக என்ற இயக்கம் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்களால் வளர்த்த இயக்கமாகும். பல்வேறு தியாகங்கள் செய்து தான் அவர்கள் இந்த இயக்கத்தை வளர்த்தனர். பல பேர் நன்றி மறந்து சென்று விட்டனர்.

ஜெயலலிதா மன்னிக்கும் தன்மை படைத்தவர். கடந்த 1989-ம் ஆண்டு தனது, நகை பொருட்களை வழங்கி கட்சியை வலிமைப்படுத்தினார். உழைப்பவர்களை எவராலும் வீழ்த்த முடியாது. ஜெயலலிதா வழியில் தொடர்ந்து பயணித்து வருகிறேன். தொண்டர்களை காக்க என்ன செய்ய வேண்டுமோ அந்த பணியை அவர் செய்து வந்தார்.

விரைவில் சோதனைகளை சாதனைகளாக மாற்றுவோம். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற அடிப்படையில் நான் 45 ஆண்டு காலம் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து மக்களுக்காக பணியாற்றி வருகிறேன். நான் இளவரசர் போல இல்லை. எளிமையாக தான் இருந்து வருகிறேன். உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்து வருகிறேன்” என்றார்.

SCROLL FOR NEXT