தமிழகம்

வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்ததாக வழக்கு: சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்

செய்திப்பிரிவு

சென்னைள்: போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பணமோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜரானார்.

கடந்த 2011 -15 அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்த செந்தில் பாலாஜி, போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பலரிடமும் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 வழக்குகளைப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் சேர்த்து மொத்தம் 2,222 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை சென்னை எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த ஜன.6-ம் தேதி முதல் குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார். அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் மேலும் 50 பேருக்கு புதிதாக சம்மன் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை நவ.12-க்கு தள்ளிவைத்துள்ளார்.

SCROLL FOR NEXT