சென்னை: தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (நவ.8) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (நவ.8) ஒருசில இடங்களிலும், நவ.9 முதல் நவ.13-ம் தேதி வரை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நாளை (நவ.8) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும், நவ.9-ம் தேதி திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (நவ.8), வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் 10 செ.மி மழை, திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் 8 செ.மி மழை, திருவள்ளூர் மாவட்டம் ஆவடி செ.மி மழை, செங்குன்றம், ராணிப்பேட்டை மாவட்டம் கலவை, சென்னை விம்கோ நகர், எண்ணூரில் தலா 7 செ.மி மழை, மணலி, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.