சென்னை: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி தொடங்கியது. வாக்காளர் பட்டியலில் தகுதியான வாக்காளர்கள் பெயர் இடம்பெறும் வகையிலும், இரட்டை பதிவுகள், இறந்தவர்கள் பெயர்களை நீக்கும் வகையிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை செயல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது.
அதன்படி பிஹாரைத் தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி, கேரளா உட்பட 12 மாநிலங்கள், யூனியன் பிர தேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொள்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து, அக்.28-ல் முதல் கட்டப் பணிகள் தொடங்கின. அதன்படி பணிகளில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான பயிற்சி, அரசியல் கட்சிகளின் கருத்துக்கேட்புக் கூட்டம் ஆகியவை நடத்தப்பட்டன.
அதைத் தொடர்ந்து, ஏற்கெனவே வெளியிடப்பட்ட பட்டியல் அடிப்படையில், அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்புக்கான விண்ணப்ப படிவங்களை வழங்கி பூர்த்தி செய்து பெறும் பணி நேற்று தொடங்கியது. தமிழகம் முழுவதும் 77 ஆயிரம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட பகுதியளவு பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை, சரி பார்த்து வீடுவீடாகக் கணக்கெடுப்பு நடத்தும் பணிகளைத் தொடங்கினர்.
சில பகுதிகளில் வீடுவீடாகச் சரிபார்த்து, அலுவலர்கள் படிவங்களை வழங்கினர். சிலரிடம் பூர்த்தி செய்து உடனடியாக பெற்றனர். மற்றவர்களிடம் படிவங்களை வழங்கிச் சென்றனர். சென்னையில் 40 லட்சத்து 4,694 வாக்காளர்களுக்கு 3,718 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக கணக்கீட்டுப் படிவம் வீடுவீடாக வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், வாக்காளர் கணக்கீட்டுப் படிவத்தை வழங்குவது தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
வாக்குச் சாவடி நிலை அலு வலர்களால் வழங்கப்படும் இரட்டை படிவங்களை, பொது மக்கள் முழுமையாகப் பூர்த்தி செய்து கையொப்பத்துடன், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மீண்டும் வரும்போது சமர்ப்பிக்க வேண்டும். படிவங்கள் அனைத்தும் டிச.4-ம் தேதிக்குள் பெறப்படும்.
அவ்வாறு பெறப்படும் படிவங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் குறித்த சந்தேகங்கள் ஏதும் இருப்பின், ‘1950’ என்ற கட்டணமில்லா தேர்தல் கட்டுப்பாட்டு தொலைபேசி எண்ணை வாக்காளர்கள் தொடர்பு கொள்ளலாம்.
துணை ஆணையர் ஆய்வு: இதனிடையே தேர்தல் துணை ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு, இயக்குநர் கே.கே. திவாரி நேற்று சென்னை வந்தனர். தேர்தல் அலுவலகத்தில் இருந்தபடி திருத்த பணிகளை ஆய்வு மேற்கொண்டனர். துணை தேர்தல் ஆணையர் மற்றும் இயக்குநர் இருவரும் இன்று மாவட்டங்களில் கள ஆய்வு செய்ய உள்ளனர்.