சென்னை: தமிழகத்தில் பிஹார் மக்களை துன்புறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதற்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், அற்ப அரசியலை நிறுத்திவிட்டு நாட்டின் நலன் மீது பிரதமர் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அந்த மாநிலத்தின் முசாபர்பூர் நகரில் கடந்த 30-ம் தேதி பாஜக பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில்காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகளை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். பிஹார் தேர்தலையொட்டி இரு ஊழல்இளவரசர்கள் கைகோத்து உள்ளனர். ஒருவர் (ராகுல்காந்தி) நாட்டின் மிகப்பெரிய ஊழல் குடும்பத்தை சேர்ந்தவர். மற்றொருவர் (தேஜஸ்வி யாதவ்) பிஹாரின் மிகப்பெரிய ஊழல் குடும்பத்தை சேர்ந்தவர் என்று விமர்சனம் செய்தார்.
இந்த கூட்டத்தில், திமுகவையும் அவர் கடுமையாக குற்றம்சாட்டினார். ‘‘கர்நாடகா, தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலங்களில் பணியாற்றும் பிஹார் மக்களை காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து அவமதித்து வருகின்றனர். இதேபோல தமிழகத்தில் பணியாற்றும் பிஹார் தொழிலாளர்களை, திமுக தலைவர்கள் அவமதித்து பேசி வருகின்றனர். இந்த கூட்டணி ஆட்சி நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும் இவ்வாறு நடைபெறுகிறது’’ என்று பிரதமர் மோடி பேசியிருந்தார்.
இதற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: இந்த நாட்டில் உள்ள அனைவருக்குமான பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையேமோடி அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தனது பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஒடிசா - பிஹார் என எங்கு சென்றாலும், பாஜகவினர் தமிழர்களின் மீதான வன்மத்தை தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்கு தமிழக மக்களின் முதல்வர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும், பிஹார் மக்களுக்கும் இடையே பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு,நாட்டின் நலன் மீது பிரதமர் மோடியும், பாஜகவினரும் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் பேச்சுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியுள்ளதாவது:
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.: வடமாநிலத் தேர்தல் வந்தால்,தமிழர்களை எதிரியாகசித்தரித்து, வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை. அடுத்த ஆண்டு தமிழகத்துக்கு வரும்போது, பிரதமர் இதே கருத்தைச் சொல்லட்டும். அப்போது வெளிமாநிலத் தொழிலாளர்களே தமிழகம் அவர்களைக் காப்பதை விளக்குவார்கள். தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பிஹாரை சேர்ந்த ஒருவர் மட்டுமே தனது அரசியலை செய்யமுடியாமல் துன்பப்பட்டு வருகிறார். அவரும் ராஜ்பவனில் வசிக்கிறார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: தேர்தலுக்காகவும், வாக்கு வங்கிக்காகவும் பிரதமர் எதை வேண்டுமானாலும் அள்ளி வீசக்கூடாது. எனது தொகுதியில் மட்டும் 1 லட்சத்துக்கு மேற்பட்ட பிஹார் தொழிலாளர்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். பிரதமர் உண்மைக்கு மாறான தகவலை கூறியுள்ளார். தான் பேசியதை அவர் திரும்ப பெற வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: தேர்தல் ஆதாயத்துக்காக தமிழகத்தின் மீதும், தமிழகமக்கள் மீதும் வன்மம் கக்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. அவர் தனது ஆட்சியின் திட்டங்களை, சாதனைகளை சொல்லிவாக்கு கேட்க முடியாத இயலாமையில் பகை உணர்வை தூண்டி, அரசியல் ஆதாயம் தேடுகிறார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தமிழகத்தில் பணிபுரியும் பிஹார் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் மோடி பச்சைப் பொய்யைப் பரப்புரை செய்வது தமிழர்கள் மீதான வன்மத்தின் வெளிப்பாடாகும். வட மாநிலத்தவர்களின் வாக்குகளைப் பெறும் ஒரே நோக்கத்துக்காக, இந்தி பேசும் மக்களிடம் இனவெறியைத் தூண்டுகிறார். அற்ப அரசியல் லாபத்துக்காக பிரதமர் மோடி தமிழர்கள் மீது வரலாற்று பெரும்பழியைச் சுமத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.