தருமபுரி / மேட்டூர்: காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லில் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு 7-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ள நிலையில், அணையில் இருந்து 35,000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தமிழகம், கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் வட கிழக்குப் பருவமழை நடப்பாண்டில் முன்கூட்டியே தொடங்கியுள்ள நிலையில், அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.
கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பிய நிலையில், உபரிநீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 28 ஆயிரம் கனஅடியாகவும், மாலையில் 32 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்தது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு தடை விதித்து தருமபுரி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நடப்பாண்டு முதல்முறையாக மேட்டூர் அணை கடந்த ஜூன் 29-ல் நிரம்பியது.
டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12-ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணை நீர்மட்டம் குறைவதும், காவிரியில் நீர்வரத்து அதிகரிக்கும்போது அணை மீண்டும் நிரம்புவதுமாக இருந்து வருகிறது. கடந்த செப்டம்ரபர் 2-ம் தேதி 6-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. பின்னர் அணை நீர்மட்டம் சற்று குறைந்தது.
இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை காரணமாக பாலாறு, தொப்பையாறு, சின்னாறு ஆகிய ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து, ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் இரவு 30,000 கனஅடியாக நீர்வரத்து இருந்தது. அதிக நீர்வரத்து காரணமாக நேற்று முன்தினம் மாலை மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை 7-வது முறையாக எட்டியது.
இதையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. நேற்று மாலை அணைக்கு நீர்வரத்து 35,000 கனஅடியாக அதிகரித்தது. அணை நிரம்பியுள்ளதால் 35,000 கனஅடி நீர் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மின் நிலையங்கள் வழியாக 22,300 கனஅடி, 16 கண் மதகுகள் வழியாக 12,700 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.
ஒரே ஆண்டில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை 7 முறையாக எட்டுவது இதுவே முதல் முறையாகும். ஓராண்டாக அணை நீர்மட்டம் 100 அடிக்கு மேல் நீடிப்பது குறிப்பிடதக்கது. அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், கரையோரப் பகுதிகளை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அதிக நீர்திறப்பு காரணமாக அணை மின் நிலையம் மற்றும் கதவணைகள் மூலம் மொத்தம் 455 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.