சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 95-வது பிறந்தநாளையொட்டி, அவரது படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 95-வது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு தமிழக அரசு சார்பில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், துணை மேயர் மு.மகேஷ்குமார், செய்தித்துறைச் செயலாளர் வே.ராஜாராமன், உயர்கல்வித் துறைச் செயலர் பொ.சங்கர், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் இரா.வைத்திநாதன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
அவருக்கு புகழாரம் சூட்டி சமூக வலைதள பக்கத்தில் தலைவர்கள் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: எப்படிப்பட்ட தடையையும் கல்வியைக் கொண்டு கடந்திடலாம், வாழ்வில் உயர்ந்திடலாம் என்று வாழ்ந்து காட்டியவர் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம். உயர்கல்விக்காக திமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை நமது மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு, இந்தியாவின் முன்னேற்றத்துக்கும் தன்னிறைவுக்கும் உழைத்தால், அதுதான் அவருக்குச் செலுத்தும் மிகச்சிறந்த நன்றிக்கடன்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தேசத்தின் கடைக்கோடியில் எளிய குடும்பத்தில் பிறந்து, தமிழ்வழிக் கல்வி பயின்று, தனது அசாதாரண திறமையால் தாய்நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்த சரித்திர நாயகன். அவர் வகுத்துக் கொடுத்த லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணித்து, வளமான இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: எப்போதும் மாணவர்களையும் இளைஞர்களையும் நம்பிக்கையுடன் முன்னேற்றத்தின் பாதையில் வழிநடத்தி, அவர்களிடம் கனவுகளை விதைத்து வந்தவர். அவர் கனவு கண்ட ‘வல்லரசு இந்தியா’ உருவாக நாம் ஒவ்வொருவரும் உறுதி ஏற்போம்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: இளைஞர்களுக்கு அவர் கூறிய அறிவுரைகள் என்றென்றும் நினைவுகூரத்தக்கது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: நாட்டு மக்களின் இதயங்களில் சிகரமாகக் குடியிருக்கும் அப்துல்கலாமின் தேசப்பற்றையும், தேசத்துக்காக அவர் ஆற்றிய பணிகளையும் போற்றி வணங்குவோம்.
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தமிழ்வழியில் படித்தால், மண்ணை மட்டுமல்ல விண்ணையும் ஆளலாம் என உலகுக்கு உணர்த்திய அறிவியல் ஞானி. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.