சென்னை: சென்னை மாநகராட்சியின் சென்னை பள்ளிகளில் ஏற்கெனவே குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் நாளொன்றுக்கு 250 லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது மாணவர்களின் கூடுதலாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக முதல் கட்டமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் 16 பள்ளிகளில் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் 16 திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொளத்தூர், திருவான்மியூர், வேளச்சேரி, தரமணி, மடுவின்கரை, புதிய வண்ணாரப்பேட்டை, கே.கே.நகர் சென்னை மேல்நிலைப் பள்ளிகள், எம்.எச்.சாலை, மேற்கு சைதாப்பேட்டை, புல்லா அவென்யூ, புத்தா தெரு, மார்க்கெட் தெரு சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், செம்மஞ்சேரி மற்றும் எம்.ஜி.ஆர். நகர்சென்னை நடுநிலைப் பள்ளிகள், ஜோன்ஸ் தெரு சென்னை தொடக்கப் பள்ளி, சைதாப்பேட்டை சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 16 பள்ளிகளில் இந்த இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளன.
அதன் அடிப்படையில் தற்போது செனாய் நகர் புல்லா அவென்யூ, மார்க்கெட் தெரு மற்றும் சைதாப்பேட்டை ஆகிய 3 சென்னை பள்ளிகளில் தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 16 சென்னை பள்ளிகளில் திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரத்தை தொடங்கி வைக்கும் விதமாக புல்லா அவென்யூவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை மேயர் பிரியா நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையர் க.கற்பகம், மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர்.கவுஷிக், நிலைக்குழுத் தலைவர்கள் நே.சிற்றரசு, த.விசுவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.