மதுரை: பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் பிரச்சார பயணத்தை மதுரையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கிவைக்கிறார்.
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில் 3 கட்டங்களாக தேர்தல் பிரச்சார பயணம் மேற்கொள்கிறார். முதல் கட்ட பயணத்தை மதுரை அண்ணாநகரில் அக்.12-ல் தொடங்குகிறார். இதற்கான கால்கோள் விழா இன்று நடைபெற்றது. தூய்மை பணியாளர்களைக் கொண்டு கால்கோள் நடப்பட்டது. இவ்விழாவில், பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், செயலாளர் கதலி நரசிங்கம் பெருமாள், மாவட்டத் தலைவர்கள் மாரி சக்கரவர்த்தி, ராஜசிம்மன், சிவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் ராம.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்க விழாவுக்கு பாஜக தேசிய தலைவர் நட்டா வருவதாக இருந்தது. பிஹார் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் நட்டா வரவில்லை. அவருக்கு பதிலாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைக்கிறார். கூட்டணிக் கட்சி தலைவர்கள் யாரெல்லாம் வருகிறார்கள் என்பது இன்று இரவு முடிவாகும்.
நயினார் நாகேந்திரன் எழுச்சி பயணத்தால் தமிழகம் தலை நிமிறும். சென்னை கோட்டையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் வரை இந்தப் பயணம் ஓயாது. மதுரை அரசியல் உணர்வு திறன் அதிகம் கொண்ட இடம். விஜயகாந்த், கமல்ஹாசன் மதுரையில் தான் கட்சியை தொடங்கினார்கள். எம்ஜிஆருக்கும் மதுரைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மதுரை முக்கியமான இடம். அதனால் தான் மதுரையில் தொடக்க விழா நடைபெறுகிறது” என்றார்.