தமிழகம்

கரூர் செல்லும் விஜய்க்கு பாதுகாப்பு கேட்டு டிஜிபி அலுவலகத்தில் தவெகவினர் மனு

வெற்றி மயிலோன்

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களை தவெக தலைவர் விஜய் நேரில் சென்று சந்திக்க அனுமதியும், பாதுகாப்பும் கேட்டு டிஜிபி அலுவலகத்தில் இன்று (அக்.8) மனு கொடுக்கப்பட்டுள்ளது.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப்.27-ல் நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். முதல்​வர் ஸ்டா​லின் மற்​றும் அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் கரூர் வந்​து, உயி​ரிழந்​தவர்களின் உடல்​களுக்கு அஞ்​சலி செலுத்​திய நிலை​யில், தவெக தலை​வர் விஜய் மட்​டும் கரூர் செல்​லாதது கடுமை​யாக விமர்​சிக்​கப்​பட்​டது.

இது தொடர்​பான வழக்​கு​கள் உயர் நீதி​மன்​றத்​தில் விசா​ரணைக்கு வந்​த​போது, விஜய்​யும், அவரது கட்​சி​யினரும் தொண்​டர்​களை நிராதர​வாக விட்​டு​விட்டு ஓடி​விட்​ட​தாக நீதிபதியும் குற்​றம்​சாட்​டி​னார்.

இதனைத் தொடர்ந்து கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நபர்களின் உறவினர்களிடம் தவெக தலைவர் விஜய் கடந்த 2 நாட்களாக வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்து வருகிறார். இந்த சூழலில், கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களை தவெக தலைவர் விஜய் நேரில் சென்று சந்திக்க அனுமதியும், பாதுகாப்பும் கேட்டு டிஜிபி அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் தரப்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

டிஜிபியிடம் மனு கொடுத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தவெக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அறிவழகன், “தவெக தலைவர் விஜய் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறுவதற்கு அனுமதி கேட்டும், அவருக்கு உரிய பாதுகாப்பு கேட்டும் காவல்துறை தலைவரிடம் மனு கொடுத்துள்ளோம்” என்றார். ஆனால், எப்போது விஜய் கரூர் செல்லவுள்ளார் என்பது குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை.

முன்னதாக, இன்று காலையில் கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக நிர்வாகி அருண்ராஜ், “கரூரைச் சேர்ந்த 33 நபர்களின் உறவினர்களிடம் எங்கள் கட்சித் தலைவர் வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். அவர் பேசும் போது பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீங்கள் தைரியமாக இருங்கள். தொடர்ந்து போராடுங்கள். என்று ஆறுதல் கூறினர். பாதிக்கப்பட்டவர்களை விரைவில் விஜய் நேரில் வந்து சந்திக்க உள்ளார். இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்துக்கு இமெயில் மூலமாக அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இன்று டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் சென்று அனுமதி கேட்க இருக்கிறோம். அரசு நடவடிக்கைகள் குறித்து இப்போது கருத்து சொல்ல விரும்பவில்லை” என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT