சென்னை: திண்டுக்கல், தருமபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல ஆய்வு மையம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய “சக்தி” புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவுகிறது.
இது குஜராத் மாநிலம் துவாரகாவிலிருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 970 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் தென்கிழக்கே மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நகர்ந்து வலுவிழக்க கூடும்.
தென்மேற்கு வங்கக் கடலில் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இவற்றின் தாக்கத்தால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 93.2 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 78.8 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும்.
கர்நாடகா-கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் இன்று அதிகபட்சமாக மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.