பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய அரியவகை ‘டூம்ஸ்டே மீன்’ 
தமிழகம்

பாம்பனில் அரியவகை ‘டூம்ஸ்டே மீன்’ சிக்கியது

செய்திப்பிரிவு

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே பாம்பனில் மன்னார் வளைகுடா பகுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் நேற்று கரை திரும்பினர். அப்போது, வலையில் ‘டூம்ஸ்டே’ (இறுதி நாள்) மீன் என்று அழைக்கப்படும் அரிய வகை ஆழ்கடல் மீனான துடுப்பு மீன் (Oar Fish) சிக்கியது சுமார் 10 கிலோ எடை, 5 அடி நீளம் இருந்த இந்த மீன், முதன்முறையாக பிடிபட்டதால் மக்கள் ஆர்வத் துடன் பார்வையிட்டனர்.

இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது, இந்த துடுப்பு மீன் நீளமான சதைப்பிடிப்பற்ற பட்டையான உடலமைப்புடன் ஆரஞ்சு நிற துடுப்புகளுடன் கூடிய மீன் இனமாகும். இவை மிதவெப்ப மண்டல கடல் பகுதிகளில் அரிதாகவே காணப்படும். அதிகபட்சம் 16 மீட்டர் நீளம் வரை வளரும்.

இந்த மீன் கரை ஒதுங்கினால் பேரழிவு வரும் என்பது ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் உள்ள மீனவர்களின் நம்பிக்கை. இதனால் இதற்கு'டூம்ஸ்டே’ மீன் என்ற பெயர் ஏற்பட்டது. ஆனால், அறிவியல்ரீதியான எவ்வித ஆதாரமும் இல்லை. அதனால், துடுப்புமீன் பிடிபடுவதாலோ அல்லது கரை ஒதுங்குவதாலோ பேரழிவு ஏற்படும் என்பது மூடநம்பிக்கை. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT