தமிழகம்

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அனுமதியின்றி தனது பாடல்கள் பயன்பாடு: இளையராஜா வழக்கு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: நடிகர் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில், அனுமதி பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் அண்மையில் வெளியானது. இந்த திரைப்படத்தில், இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சக் குருவி ஆகிய பாடல்களை அனுமதியில்லாமல் பயன்படுத்தியுள்ளதாகக் கூறி இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் அவரது வழக்கறிஞர்கள் கே.தியாகராஜன், ஏ.சரவணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், அனுமதியில்லாமல் பயன்படுத்திய பாடல்களை படத்தில் இருந்து நீக்கவும், 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரியும் அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளித்த தயாரிப்பு நிறுவனம், சட்டப்பூர்வ உரிமையாளரிடம் இருந்து பாடல்களை பயன்படுத்த அனுமதி பெற்றதாகக் கூறியதாகவும், ஆனால் அந்த உரிமையாளர் யார் என்பதை தெரிவிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

தனது அனுமதியில்லாமல் பாடல்களை பயன்படுத்தியது பதிப்புரிமைச் சட்டத்துக்கு விரோதமானது என்பதால், படத்தில் பாடல்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் முன், செப்டம்பர் 8 ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT