ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய சிவகங்கை ராணுவ வீரருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை இந்தியா அழித்தது. அதில் இந்தியாவை தாக்குவதற்காக பாகிஸ்தான் ஏராளமான ட்ரோன்களை அனுப்பியது. அப்போது, எல்லை பாதுகாப்புப் பணியில் இருந்த சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே முத்தூர் ஊராட்சியிலுள்ள குறிச்சியைச் சேர்ந்த ராணுவ வீரர் கந்தன் (48), பாகிஸ்தான் ட்ரோன்களை செயலிழக்கச் செய்தார்.
அவரது வீரதீரச் செயலை பாராட்டி, மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கந்தனுக்கு தங்கப் பதக்கத்தை ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி வழங்கி பாராட்டினார். கந்தன் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் பணிபுரிகிறார். அவரது குடும்பம் காரைக்குடியில் உள்ளது. அவரது சகோதரர் தர்மலிங்கமும் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. பதக்கம் பெற்ற ராணுவ வீரர் கந்தனை, அவரது சொந்த ஊரான குறிச்சி மக்கள் மற்றும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் பாக்கியராஜ் உள்ளிட்டோர் பாராட்டினர்.