சென்னை: ‘நடப்பு கல்வி ஆண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு கூடுதலாக 20 சதவீதம் இடங்கள் வழங்கப்படும்’ என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உயர்கல்வி அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதால் மாணவ, மாணவிகளுக்கு புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி, திறன் மிகுந்த சமுதாயத்தை உருவாக்க நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை தமிழக முதல்வர் வழங்கி வருகிறார்.
இதன் காரணமாக, கடந்த 4 ஆண்டுகளில் உயர்கல்வி சேர்க்கை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தியாவிலேயே மாணவர் சேர்க்கை விகிதத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. நடப்பு கல்வி ஆண்டில் கலை - அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்காக அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். அதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு புதிதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க முதல்வர் ஆணையிட்டார். அதன்படி, 15 கல்லூரிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
மேலும், உயர்கல்வி பயில பெருமளவில் மாணவர்கள் காத்திருப்பதை அறிந்து அரசு கலை - அறிவியல் கல்லூரிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தி வழங்கவும், அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு 15 சதவீத இடமும், சுயநிதி கல்லூரிகளுக்கு 10 சதவீத இடமும் கூடுதலாக வழங்கவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, கூடுதல் இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.