செந்தில்குமார் 
தமிழகம்

நீலகிரி அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் போக்சோவில் கைது

ஆர்.டி.சிவசங்கர்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் படிக்கும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள ஹோப் பார்க் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (50). இவர் 23 ஆண்டுகளாக அறிவியல் ஆசிரியராக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் பணியாற்றி உள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஊட்டி அருகே உள்ள ஓர் அரசுப் பள்ளியில் பணியில் சேர்ந்தார்.‌ இவர் அந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அறிவியல் பாடம் எடுத்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த அரசுப் பள்ளிக்கு பாலியல் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக போலீஸார் சென்றனர். அப்போது உடலில் நல்ல தொடுதல், (good touch) கெட்ட தொடுதல் (bad touch) குறித்து மாணவ- மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்பு முடிந்ததும் பள்ளியில் இருந்த 6-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி ஒருவர் அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார், உடலில் தகாத இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியுள்ளார். இதேபோல் பல மாணவிகளும் ஆசிரியர் செந்தில்குமார் தங்களின் மார்புப் பகுதி மற்றும் உடலின் பின்புறம் உள்பட பல இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்றனர்.

மேலும் ஒரு சில நேரங்களில் மாணவிகளுக்கு அவர் முத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. முடிவில் பள்ளியில் படித்த 21 மாணவிகள் செந்தில்குமார் மீது பாலியல் தொந்தரவு புகார் அளித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கும், குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் ஊட்டி ஊரக ஆய்வாளர் விஜயா தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT