மகளை கர்ப்பமாக்கி கொலை செய்ததாக, முன்னாள் ராணுவ வீரருக்கு 55 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நாகர்கோவில் நீதிமன்றம், தண்டனையை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என பரபரப்பு தீர்ப்பளித்தது.
கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அம்பலக்கடையை சேர்ந்தவர் புரூஸ்வெல்ட். முன்னாள் ராணுவ வீரர். இவரது முதல் மனைவி இறந்து விடவே, 2-வது திருமணம் செய்தார். முதல் மனைவி மூலம் ஷெர்லி ஜாஸ்மின் (16) என்ற மகள் இருந்தார்.
கடந்த 2010-ம் ஆண்டு மே 29-ம் தேதி, வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் ஷெர்லி ஜாஸ்மின் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அருமனை போலீஸார் விசாரித்தனர். தனது மகளை மர்ம நபர்கள் கொலை செய்து, நகைகளை திருடிச் சென்றதாக புரூஸ்வெல்ட் புகார் கூறினார்.
பிரேத பரிசோதனையில் ஷெர்லி ஜாஸ்மின் 4 மாத கர்ப்பி ணியாக இருந்தது தெரிய வந்தது. போலீஸ் விசாரணையில் புரூஸ்வெல்ட் தனது மகளை கர்ப்பமாக்கி, கொலை செய்தது தெரிய வந்தது. புரூஸ்வெல்ட் கைது செய்யப்பட்டு, அவர் மீது நாகர்கோவில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கு தொடரப்பட்டது. பின்னர் நாகர்கோவில் மகளிர் விரைவு நீதிமன்றத்துக்கு இவ் வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.
பரபரப்பு தீர்ப்பு
இவ்வழக்கில் வியாழக்கிழமை மாலை நீதிபதி முத்துசாரதா தீர்ப்பு வழங்கினார். கொலை குற்றத்துக்கு ஆயுள் தண்டனை, ரூ. 50,000 அபராதம், கருக்கலைப்பு செய்த குற்றத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 25,000 அபராதம், கருவில் இருந்த 4 மாத சிசுவை கொலை செய்த குற்றத்துக்காக 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 25,000 அபராதம், கற்பழிப்பு குற்றத்துக்கு ஆயுள் தண்டனை, தடயங்களை அழித்த குற்றத்துக்காக 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 25,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இரண்டு ஆயுள் தண்டனைகள் மற்றும் 27 ஆண்டுகள் சிறை தண்டனையை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் புரூஸ்வெல்ட்டுக்கு 57 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1,25,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. போலீஸ் தரப்பில் அரசு வழக்கறிஞர் ஞானசேகர் ஆஜரானார்.