கர்நாடகாவில் இருந்து 60 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மாலை நேர நிலவரப்படி 118 அடி தொட்டது. இதனால் முழு கொள்ளளவை எட்டும் முன்பாகவே அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுகிறது.மேலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது, கர்நாடக மாநிலம் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து காவிரியில் அதிக அளவு நீர் திறக்கப்பட்டு வருவதால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
நேற்று முன்தினம் அணைக்கு விநாடிக்கு 59,954 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 64,595 கனஅடியாக அதிகரித்தது. நேற்று முன்தினம் 112.04 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 114.63 அடியானது.
இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 116 அடியை கடந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் மாலை 4 மணிநேர நிலவரப்படி அணைக்கு கூடுதலாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 117.47 அடியை தொட்டது. இதனால் எந்த நேரத்திலும் அணை நிரம்பும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சுரங்கம் வழியாக தற்போது திறக்கப்பட்டு வரும் 20,000 கன அடி நீருடன் கூடுதல் நீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 16 கண் மதகு வழியாக கூடுதலாக 8,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, மேட்டூர் கால்வாய் வழியாகவும் 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
வெள்ள அபாய எச்சரிக்கை
காவிரி ஆற்றில் கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அணை முழுக்கொள்ளளவு எட்டிவிட்டால், அணைக்கு வரும் நீரில் 90 சதவீதம் காவிரியில் திறக்க வேண்டியிருக்கும்.
எனவே, இரு நாட்களுக்கு பின்னர் அணையில் இருந்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர் திறக்க வாய்ப்பு உள்ளது. இதனால், காவிரி கரையோர மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ளம் குறித்து எச்சரிக்கப்பட்டு வருகிறது.