தமிழகம்

கடத்தல் வழக்கு: பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமன் ஆகியோர் இன்று மதியம் 2.30 மணிக்கு நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், பூவை ஜெகன்மூர்த்தி நேரில் ஆஜராவதற்காக வழக்கு விசாரணை 45 நிமிடங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தி கடத்தியதாக புகார் எழுந்தது.

காதல் விவகாரத்தில் இளைஞரை கடத்தியதாக கே.வி.குப்பம் எம்.எல்.ஏ பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைதாகியுள்ளனர். பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், கடத்தல் வழக்கிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதால் தனக்கு முன் ஜாமீன் வழங்க உத்தரவிடக் கோரினார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டது.

இதற்கு அனுமதி அளித்த தலைமை நீதிபதி, வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரிப்பார் என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி பி.வேல்முருகன் இன்று விசாரிப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி இன்று விசாரணை நடைபெற்றது. பூவை ஜெகன்மூர்த்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் ஆஜராகி வாதிட்டார்.

காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் ஆஜராகி, இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,இந்த சம்பவத்தில் காவல்துறை ஏடிஜிபி ஜெயராமனுக்கு தொடர்புள்ளதாகவும் பணம் சம்பந்தப் பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி , பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமன் ஆகியோர் மதியம் 2.30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், பூவை ஜெகன்மூர்த்தி நேரில் ஆஜராவதற்காக வழக்கு விசாரணை 45 நிமிடங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT