தமிழகம்

பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் நீக்கம்: ராமதாஸ் நடவடிக்கை

செய்திப்பிரிவு

விழுப்புரம்: பாமக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அன்புமணியின் ஆதரவாளர் வடிவேல் ராவணனை, கட்சி நிறுவனர் ராமதாஸ் நேற்று நீக்கினார்.

பாமகவில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. கட்சிப் பொருளாளர் திலகபாமா, சமூகநீதி பேரவைத் தலைவர் வழக்கறிஞர் பாலு மற்றும் 60 மாவட்டத் தலைவர்கள், செயலாளர்களை ராமதாஸ் நீக்கியுள்ளார். இந்நிலையில், அன்புமணியுடன் சென்ற மாநிலப் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணனை கட்சிப் பதவியில் இருந்து நேற்று அதிரடியாக நீக்கிவிட்டு, அப்பதவிக்கு முரளி சங்கர் என்பவரை ராமதாஸ் நியமித்துள்ளார்.

இந்நிலையில், வடமாவட்டங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில், ராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பேராசிரியர் தீரன், அருள் எம்எல்ஏ, பு.தா.அருள்மொழி, அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறும்போது, “கடந்த ஒரு வாரமாக நடந்த நிகழ்வுகள் கவலை அளிக்கின்றன. விரைவில் நல்ல தீர்வு ஏற்பட வேண்டும் என முயற்சி மேற்கொண்டுள்ளோம். இருவரும் மனம் விட்டுப் பேசினால் தீர்வு ஏற்படும். 2026-ல் தேர்தல் வர உள்ளது. அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால், இயக்கத்தை பலப்படுத்தி, வெற்றிக்கு வலு சேர்க்க முடியும்” என்றார்.

SCROLL FOR NEXT