ஆன்டர்சன்பேட்டையில் உள்ள புதிய பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி வீட்டின் முன்பு திரண்ட தொண்டர்கள். 
தமிழகம்

பூவை ஜெகன்மூர்த்தியை விசாரிக்க போலீஸார் முயன்றதால் பரபரப்பு - நடந்தது என்ன?

செய்திப்பிரிவு

சென்னை: காதல் திருமண விவகாரத்தில் பெண் வீட்டுக்கு ஆதரவாக சிறுவனை கடத்திய வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்ய போலீஸார் முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் காதல் திருமண விவகாரத்தில் பெண் வீட்டார், மணமகனின் சகோதரனை கடத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தியை விசாரிக்க திருவள்ளூர் காவல் துணை கண்காணிப்பாளர் தலை மையிலான போலீஸார், ஆன்டர் சன்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றனர்.

இதையறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலீஸாரை தடுத்து நிறுத்தினர். இதனால் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு, அப்பகுதி முழுவதும் பரபரப்புக்குள்ளானது. பின்னர், தொண்டர்கள் கைது, நீண்ட பேச்சுவார்த்தை என 3 மணி நேரத்துக்குப் பிறகு சில போலீஸார் மட்டும் வீட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அங்கு ஒரு மணி நேரம் சோதனை செய்த பிறகு. ஜெகன்மூர்த்தி இல்லாததை உறுதி செய்த போலீஸார் புறப்பட்டுச் சென்றனர்.

இதுதொடர்பாக கட்சியின் முதன்மைச் செயலாளர் ருசேந்திர குமார் கூறும்போது, 'போலீஸார் கூறிய கடத்தல் வழக்குக்கும், பூவை ஜெகன்மூர்த்திக்கும் தொடர்பில்லை. பூட்டை உடைத்து போலீஸார் உள்ளே நுழைந்தனர். போலீஸார் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்றார்.

பழனிசாமி கண்டனம்: போலீஸாரின் நடவடிக் கையைக் கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சமூக வலைதள பக்கத்தில், 'திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அராஜகப் போக்கைக் கையாண்டு பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய முயற்சிப்பதற்கு எனது கடும் கண்டனம். கூட்டணியைக் கண்டு ஆளும் திமுக அரசு பயந்து வருவதையே இது காட்டுகிறது’ என கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT