பொன்முடி | கோப்புப் படம் 
தமிழகம்

பொன்முடி பெண்களை இழிவாக பேசிய வழக்கு: டிஜிபி, சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது பெண்கள் குறித்தும் சைவ மற்றும் வைணவ மதங்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் பேச்சு வெறுப்பு பேச்சு வரம்புக்குள் வருவதால், அவருக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி, பொன்முடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி தாமாக முன் வந்து எடுக்கப்பட்ட வழக்கு, நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார். மேலும், வழக்கு தொடர்பாக பதிலளிக்க டிஜிபி மற்றும் காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 25-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

SCROLL FOR NEXT