இலங்கை நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையில் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்திய சுதந்திர தினத்தையொட்டி இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் இலங்கை அதிபர் ராஜபக்சே விடுதலை செய்ய உத்திரவிட்டதை தொடர்ந்து யாழ்பாணம் மற்றும் அனுராதபுரம் சிறைகளிலிருந்து 94 தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 20 பேர் தலைமன்னார் கடற்படை முகாமிலிருந்து காலை 10 மணியளவில் புறப்பட்டு மதியம் இரண்டு மணியளவில் இலங்கை கடற்படையினரால் சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த மீனவர்கள் 20 பேரும் மண்டபம் கடற்படை தளத்திற்கு மாலை 5 மணியளவில் வந்தடைவார்கள்.
மேலும் காங்கேசன் துறைமுகத்திலிருந்து இன்று காலை புறப்பட்ட 74 தமிழக மீனவர்கள் மாலை 6 மணியளவில் காரைக்காலை சென்றடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.