மாணவி ராஜேஷ்வரி 
தமிழகம்

ஜேஇஇ தேர்வில் சாதித்த பழங்குடியின மாணவி ராஜேஷ்வரியின் கல்விச் செலவை அரசே ஏற்கும்: முதல்வர் ஸ்டாலின்

மார்கோ

சென்னை: “அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் சல்யூட். அவரது உயர் கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “தந்தையை இழந்தாலும், அவர் கனவைத் தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் சல்யூட். அவரது உயர் கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். ராஜேஷ்வரி போன்ற நமது மகள்கள் மேலும் பலர் சேருவதுதான் ஐஐடி-க்கு உண்மையான பெருமையாக அமையும். அதற்காக நமது திராவிட மாடல் அரசு தொடர்ந்து உழைக்கும்,” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இபிஎஸ் வாழ்த்து: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சேலம் மாவட்டம் கல்வராயன்மலை அருகே வசித்து வரும் கருமந்துறை பழங்குடி இனத்தை சேர்ந்த செல்வி. ராஜேஸ்வரி, 12ம் வகுப்பில் 521 மதிப்பெண்களும், ஜேஇஇ தேர்வில் இந்திய அளவில் 417-வது இடத்தையும் பிடித்து, ஐஐடியில் இடம் கிடைத்துள்ள செய்தி கேட்டு மகிழ்வுற்றேன்.மாணவி ராஜேஸ்வரிக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள். தனது தந்தையாரை கடந்த 2024-ல் புற்றுநோயால் இழந்த நிலையிலும், ராஜேஸ்வரி உழைத்து பெற்றுள்ள இந்த வெற்றி மெச்சத்தக்கது. கல்வி ஒன்றே சமூக முன்னேற்றத்தின் வழி. மாணவி ராஜேஸ்வரி உயர்கல்வியிலும் சிறக்க வாழ்த்துகிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், “ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று சென்னை ஐஐடியில் இடம் பிடித்து சாதனை படைத்திருக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியின மாணவி ராஜேஸ்வரிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உடல்நலக்குறைவால் மறைந்த தந்தையின் கனவை தன் லட்சியமாகக் கொண்டு, விடாமுயற்சியின் மூலம் சென்னை ஐஐடியில் இடம்பிடித்திருக்கும் மாணவி ராஜேஸ்வரியின் உயர்கல்விப் பயணம் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT