தமிழகம்

பஸ் கட்டண உயர்வு குறித்து கருத்துகேட்பு; மக்களிடம் கொள்ளையடிக்க திமுக அரசு திட்டம்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: ‘பேருந்து கட்டண உயர்வு தொடர்பான கருத்துக் கேட்பு விவகாரத்தில் மக்களிடம் முடிந்தவரை கொள்ளையடிக்க திமுக அரசு முடிவு செய்து விட்டது’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்த திமுக அரசு முடிவு செய்திருப்பதாகவும் அதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை அரசிடம் தெரிவிக்கலாம் எனவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

பேருந்துக் கட்டண உயர்வு குறித்து உயர் நீதிமன்றம் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யச் சொன்னதும் அதற்காக பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்படுவதும் சரிதான். ஆனால், மக்களின் விருப்பங்களுக்கும் கருத்துகளுக்கும் இந்த ஆட்சியில் இதுவரை மதிப்பளிக்கப்பட்டுள்ளதா என்பதுதான் இங்கே அடிப்படைக் கேள்வி. மக்களின் விருப்பப்படிதான் இந்த ஆட்சி நடக்கிறது என்றால் அனைவருக்கும் சமக் கல்வி வழங்கும் தேசியக் கல்வி கொள்கையை திமுக அரசு எப்போதோ ஏற்றுக் கொண்டிருக்கும்.

மேலும், திமுக அரியணை ஏறியது முதல் மின்சாரக் கட்டணம், சொத்துவரி, தொழில்வரி, ஆவின்பால் விலை, முத்திரைக் கட்டணம் என தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் விலைவாசி மற்றும் வரி உயர்வால் விழி பிதுங்கி கிடக்கும் தமிழக மக்கள், தங்கள் அன்றாடப் போக்குவரத்துக்குத் தேவையான பேருந்துகளின் பயணச்சீட்டு கட்டணத்தை உயர்த்த ஒப்புக் கொள்வார்களா?

ஆக, ஆட்சிக் காலம் முடிவதற்குள் மீதமிருக்கும் பேருந்துக் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க திமுக அரசு முடிவு செய்துவிட்டது என்பதும், மக்களிடம் கருத்துக் கேட்பதாகக் கூறி விளம்பரப்படுத்துவது கண் துடைப்பு நாடகம் என்பதும் மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், பேருந்துக் கட்டணத்தை உயர்த்த தமிழக பாஜக ஒருபோதும் அனுமதிக்காது.

எனவே, பேருந்து கட்டண உயர்வு என்ற எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் முடிவை திமுக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT