பிரேமலதா விஜயகாந்த் | கோப்புப்படம் 
தமிழகம்

“தேமுதிகவுக்கு அதிமுக ஒரு சீட் வழங்காவிட்டால்...” - பிரேமலதா விஜயகாந்த்

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: “தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும். இல்லையேல் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்.” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிகவுக்கு 5 எம்.பி. சீட்டுகளும், ஒரு மாநிலங்களவை சீட்டும் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை. அவ்வாறு கொடுக்கவில்லை என்றால், அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்.

தேமுதிகவுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு ஒருமுறை அன்புமணிக்கும், மற்றொரு முறை ஜி.கே.வாசனுக்கும் தரப்பட்டது. அதை தேமுதிக மனதார ஏற்றுக்கொண்டது. தற்போது கமல்ஹாசனுக்கு திமுக தரப்பில் மாநிலங்களவை சீட் வழங்கியது வரவேற்கத்தக்கது. அரசியலில் நம்பிக்கைதான் முக்கியம். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றினால்தான் பொதுமக்கள் நம்புவார்கள்.

இன்னும் 2 நாட்களில் தேமுதிக சார்பில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி உள்ளிட்டவை குறித்த எங்களது நிலைப்பாடு தெளிவுபடுத்தப்படும். அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் ஞானசேகரனுக்கு மட்டுமின்றி, அவருக்குப் பின்னணியில் உள்ளவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும்.

பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை என்பது, அவர்களது குடும்பப் பிரச்சினை. இதில் மற்றவர்கள் தலையிடக்கூடாது. இனிவரும் காலங்களில் கூட்டணி ஆட்சிதான் இருக்கும். ஆளும் கட்சி மீதும், ஏற்கெனவே ஆண்ட கட்சி மீதும் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்” என்று பிரேமலதா கூறினார்.

SCROLL FOR NEXT