சென்னை: அரசியல் ரீதியாக என்னை எதிர்கொள்ள முடியாமல் போலி குற்றச்சாட்டுகளை முதல்வர் ஸ்டாலின் அள்ளி தெளித்து வருகிறார் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதாக கூறியதில் இருந்து முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான பழனிசாமி இடையே சொற்போர் நீண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:
3 ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கிறேன் என கூறிவிட்டு, இப்போது மட்டும் சென்றது ஏன், தமிழகத்துக்கான 'நிதி' க்காகவா, இல்லை உங்கள் குடும்ப உறுப்பினர் 'நிதி'-க்காகவா என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அதற்கான உண்மை பதில் என்ன?
ஏதோ டெல்லிக்கு போய் பல ஆயிரம் கோடிகள் தமிழ்நாட்டுக்கு நிதியை கையோடு கொண்டு வந்த ரேஞ்சுக்கு பில்டப் செய்கிறீர்களே, உங்கள் குடும்பம் கொள்ளையடித்த பல ஆயிரம் கோடி ரூபாய்களையும், அதன் பின்னணியில் உள்ள 'நிதி'களையும், அவர்களுக்கு துணையான 'தம்பி'களையும் காப்பற்றிவிடலாம் என்ற நப்பாசையில் தானே பயந்து, நடுங்கி டெல்லிக்கு ஓடோடி சென்றீர்கள். அதுவும் மண்ணோடு மண்ணாகிப் போனதாமே?
மத்தியில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி இல்லை. உங்கள் ஆட்சியின் ஊழலுக்கான தண்டனையில் இருந்து யாரும் உங்களை காப்பாற்ற முடியாது. எதிர்க்கட்சித் தலைவராகிய நான் எங்கு, எப்படி செல்கிறேன் என்று கண்காணிக்க செலவிட்ட நேரத்தை, தங்கள் அவல ஆட்சியில் நடக்கும் குற்றங்களைத் தடுப்பதில் செலவிட்டு இருக்கலாம். ஏதேனும் பயன் இருந்திருக்கும்.
எப்போது பார்த்தாலும் "ரெய்டுகளுக்கு பயந்து" என்று சொல்கிறீர்களே, எந்த ரெய்டைப் பார்த்து எனக்கு பயம், இந்த ரெய்டுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். நீங்கள் குறிப்பிடும் உறவினர்கள் எனக்கு உறவினர் ஆகும் முன்னரே பல தொழில்களை செய்து வந்தவர்கள்.
இருமுறை வருமானவரி சோதனைகளைக் சந்தித்தவர்கள். முரண்பாடுகள் இருப்பின், முறையாக கணக்கு காட்டி, அதற்கான விளக்கத்தை அளிக்கப் போகிறார்கள். இதில் நான் செய்வதற்கு எதுவுமே இல்லை என்பது ஊரறிந்த உண்மை. அரசியல் ரீதீயாக என்னை எதிர்கொள்ள முடியாமல் இதுபோன்ற போலி குற்றச்சாட்டுகளை அள்ளித்தெளிப்பது வெட்கக்கேடானது.
உங்கள் வீட்டுத் 'தம்பி' ஆவதற்கு முன் ரத்தீஷ் யார், அவரிடம் என்ன சொத்து இருந்தது, என்ன தொழில் செய்தார், எவ்வளவு லாபம் பார்த்தார், இன்று ரத்தீஷ் மற்றும் அவரைச் சார்ந்தோரின் சொத்து மதிப்பு என்ன, எத்தனை கம்பெனிகள் வைத்துள்ளனர், இதையெல்லாம் நேரடியாகப் பேச நீங்கள் தயாரா ஸ்டாலின், நீங்கள் கதறுவதை நான் மட்டுமல்ல; மக்களும் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவ்வாறு பழனிசாமி பதிவிட்டுள்ளார்.