தமிழகம்

“தமிழகம் எனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் வாழ்ந்த பூமி” - ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது காலத்தின் கட்டாயம். இத்திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆதரித்தார். ஆனால், தற்போது முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கிறார். என ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்தரங்கம், தமிழக பாஜக சார்பில் சென்னை திருவான்மியூரில் நேற்று நடைபெற்றது. ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்று கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார். அவருக்கு ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குழு மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழக பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன், ‘வேல்’ வழங்கி வரவேற்றார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலை வகித்தார்.

இக்கருத்தரங்கில் பவன் கல்யாண் பேசியதாவது: சென்னையில் வளர்ந்த நான், தமிழகத்தை விட்டுசென்று 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. நான் தமிழகத்தை விட்டு போயிருக்கலாம். ஆனால் தமிழகம் என்னை விட்டு போகவில்லை. என்னைப் பொறுத்தவரை தமிழகம் என்பது திருவள்ளுவரின் பூமி. சித்தர்களின் பூமி. நான் வணங்கும் தமிழ்க் கடவுள் முருகனின் பூமி. எனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் வாழ்ந்த பூமி. இன்றைக்கு ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து பல பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடைமுறைக்கு வந்தால் ஆட்சி மாற்றம் இருக்காது, இது கூட்டாட்சிக்கு எதிரானது என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நடைமுறை நம் நாட்டுக்கு புதிதல்ல. 1952 முதல் 1967 வரை இந்த முறைதான் இருந்து வந்தது. ஆனால் அதன்பிறகு அதில் மாற்றம் ஏற்பட்டபோது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்ந்து இருக்க வேண்டும் என ஆதரித்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. ஆனால் இன்று அதையே, முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எதிர்க்கிறார்.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை எதிர்ப்பவர்கள், ‘நெஞ்சுக்கு நீதி’யில் இதுகுறித்து கருணாநிதி பேசியிருப்பதை படிக்கவேண்டும். கடந்த சில ஆண்டுகளாகவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து தேர்தல்கள் நடந்து வருகின்றன. இதனால் வளர்ச்சியில் நம்மால் கவனம் செலுத்த முடியவில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடைமுறைக்கு வந்தால் இந்தியாவின் ஜிடிபி ரூ.4.5 லட்சம் கோடிக்கு அதிகரிக்கும். எனவே ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் பரிசீலித்து ஆதரவு தர வேண்டும். இது அரசியல் சீர்திருத்தம் மட்டுமல்ல. ஒரு பொருளாதார சீர்திருத்தமாகும். இது காலத்தின் கட்டாயம். அதை ஏற்றுக்கொள்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக நயினார் நாகேந்திரன் பேசும்போது, “ஆந்திரமும், தமிழகமும் ஒருங்கிணைந்த ஒரே கலாச்சாரம் மற்றும் பண்பாட்டைக் கொண்ட மாநிலங்கள். ஆந்திராவில் என்டிஆர், தமிழகத்தில் எம்ஜிஆர். அந்த வரிசையில் புதிய வரவாக பவன் கல்யாண். கடந்த 2024-ல் நடந்த தேர்தலில் மட்டும் ரூ.1 லட்சம் கோடி செலவாகியிருக்கிறது. இதுவே ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்று நடந்தால் ரூ.12 ஆயிரம் கோடி வரை நம்மால் சேமிக்க முடியும். நேரம் மிச்சமாகும்” என்றார்.

இந்நிகழ்வில் பாஜக தேசியச் செயலாளர் அரவிந்த் மேனன், தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தேசிய ஒருங்கிணைப்பாளர் அனில் கே.ஆண்டனி, தமிழக பாஜக துணைத் தலைவர்கள் கரு நாகராஜன், நாராயணன் திருப்பதி, வி.பி.துரைசாமி, விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, சமூக ஊடக பிரிவு பார்வையாளர் அர்ஜுன மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நடிகர் வேறு; அரசியல் வேறு: செய்தியாளர்களிடம் பவன் கல்யாண் கூறும்போது, “அதிமுக - பாஜக கூட்டணி என்பது மக்களுக்காக அமைந்திருக்கிறது. இந்த கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும் என நம்புகிறேன். நடிகர் என்பது வேறு. அரசியல் என்பது வேறு. தவெக கட்சியைத் தொடங்கியிருக்கும் விஜய்க்கு எனது வாழ்த்துகள். யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. இதுவரை தவெகவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை” என்றார்.

SCROLL FOR NEXT