ராமேசுவரம்: மறு அறிவிப்பு வரும் வரை ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய, தென் தமிழக கடலோரப் பகுதிகள் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வீசக்கூடும், மேலும் கடல் அலை 3 முதல் 3.5 மீட்டர் உயரத்தில் எழக் கூடும் என்பதால் இன்று (திங்கட்கிழமை) ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் நாட்டுப் படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல மீன்வளத் துறையினர் அனுமதி வழங்கவில்லை.
மேலும், மறு அறிவிப்பு வரும் வரை நாட்டுப் படகு மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும், தங்களது மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்திடவும் மீன்வளத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். முன்னதாக, அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ராமேசுவரம் அருகே பாம்பன் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.