மேட்டுப்பாளையம் அரசு வள்ளுவர் நகரவை பள்ளியில் மீட்புப் பணிக்கான உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ள மாநில பேரிடர் மீட்புப் படையினர். 
தமிழகம்

கனமழை எச்சரிக்கை எதிரொலி - மேட்டுப்பாளையத்தில் தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு குழு

இல.ராஜகோபால்

கோவை: நீலகிரி மற்றும் கோவை பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் உபகரணங்களுடன் மேட்டுப்பாளையத்தில் தயார் நிலையில் உள்ளனர்.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை அடுத்த சில நாட்களில் தொடங்க உள்ளது. கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. மத்திய அரபிக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மே 25 மற்றும் மே 26ல் அதிக மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையத்தினரால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மலைப் பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகளவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் பருவமழை பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து கோவை வந்தனர். அதில், 23 பேர் மேட்டுப்பாளையம் பகுதிக்கு இன்று (மே 25) சென்றனர். பவானி ஆற்றில் நீரோட்டம் அதிகரித்துள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மேலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்வதற்கான குன்னூர் மற்றும் கோத்தகிரி மலைப்பாதைகளில் மரங்கள் விழுதல், மண் சரிவு போன்ற சம்பவங்கள் ஏற்பட்டால் துரிதமாக செயல்பட மாநில பேரிடர் மீட்புப் படையினர் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் முகாமிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT