தமிழகம்

தமிழக அரசின் தலைமை காஜி மறைவு - முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாகிப் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் வயது முப்பு காரணமாக, தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முஹம்மது அயூப் (84) மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட பல அரசியல் கட்சித் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்று சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், இன்று தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாகிபின் இல்லத்திற்கு நேரில் சென்று மறைந்த சாகிபின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அவருடன், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் துறைமுகம் காஜா, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ் ஆகியோர் துக்க நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேபோல், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சார்பில், தமிழக அரசின் தலைமை காஜி சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் சாஹிப் உடலுக்கு, அமமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தமிழன் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே, தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாகிபின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: தமிழ்நாடு அரசின் தலைமை காஜியும், தமிழ் சமுதாயத்திற்கும், இஸ்லாமிய சமுதாயத்திற்கும் பல்வேறு சேவைகள் செய்த பேரறிஞருமான சலாஹுத்தீன் அயூப் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

தலைமை காஜி சலாஹுத்தீன் அயூப் அவர்களின் மறைவு இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும். அவரது தொண்டினை நினைவுகூர்கின்ற இவ்வேளையில், அவரது ஆன்மா எல்லாம் வல்ல இறைவனின் நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன். மேலும் அன்னாரது குடும்பத்திற்கும், இஸ்லாமிய சகோதரர் , சகோதரிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: தமிழ்நாட்டின் அரசாங்கத் தலைமை காஜியாக மிகச்சிறப்பாக செயல்பட்ட சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் அவர்களின் மறைவு வருத்தத்துக்குரியது. இஸ்லாமிய சட்ட திட்டங்களை (ஷரியா) செயல்படுத்துவதிலும், சமூகத்திற்கு வழிகாட்டுவதிலும் கடமை உணர்வோடு, பொறுப்பாக, சிறப்பாக செயல்பட்டவர். படித்து பட்டம் பெற்ற பெருமை மிக்க அறிஞர். சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை வளர்க்க பாடுபட்டவர்.

இஸ்லாமியர்களுக்கு நல் வழி காட்டுவதற்கு அக்கறையோடு பணியாற்றியவர். இஸ்லாமிய சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு வாழ்ந்தவர். இரக்க குணம் மிக்க இவர் அனைவராலும் போற்றப்பட்டவர். காஜி சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் அவர்களின் மறைவு அவரது குடும்பத்திற்கும், இஸ்லாமியர்களுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: தமிழக அரசின் தலைமை காஜியாக செயல்பட்டு வந்த சலாவுதீன் முகமது சாகிப் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அரபு மொழி மற்றும் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியரான அவர், உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியத் தலைவர்களுடன் நல்லுறவு கொண்டிருந்தார். தமிழகத்திலுள்ள இஸ்லாமிய மக்களுக்கு கல்வி, கலாச்சாரம் குறித்து வழிகாட்டினார். அனைவர் மீதும் அன்பு செலுத்திய அவர், மத நல்லிணக்கத்திற்காகவும் பாடுபட்டார். அவரை இழந்து வாடும் இஸ்லாமிய பெருமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: அரபு மொழி மற்றும் இலக்கியத்தில் நிபுணத்துவம் பெற்றவரும், தமிழக அரசின் தலைமை காஜியுமான சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் அவர்கள் வயது மூப்பின் காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். தலைமை ஹாஜி அவர்களின் பிரிவால் வருந்தும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: தமிழக அரசின் மாநில தலைமை ஹாஜி சலாஹூதீன் முஹம்மத் அய்யூப் சாஹிப் அவர்களின் வயது 84. வயது மூப்பு காரணமாக, உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) இரவு 9 மணியளவில் அவர் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன்.

சுமார் 40 வருடங்களாக தமிழக அரசு தலைமை காஜியாக கவுரவ பொறுப்பு வகித்தவர், எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர் என்பதும் நினைவு கூறத்தக்கது. அவரை இழந்து வாடும் இஸ்லாமிய சொந்தங்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT