ராமநாதபுரம்: காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியாக பாம்பன், தூத்துக்குடி, குளச்சல் ஆகிய 3 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அரபிக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது ரத்னகிரி - டபோலி இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகபட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாண்டிச்சேரி ஆகிய 6 துறைமுகங்களில் இன்று (மே 24) 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் பாம்பன், தூத்துக்குடி, குளச்சல் ஆகிய 3 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். மன்னார் வளைகுடா பகுதியில் மணிக்கு 35 கி.மீ முதல் 55 கி.மீ வரை காற்று வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது. பலத்த காற்றோடு மழை பெய்யும் மோசமான வானிலையை குறிப்பதால், மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.