திருநெல்வேலி: “ராமதாஸ், அன்புமணி இருவரும் ஒன்று சேர வேண்டும். பாஜக கூட்டணியில் அவர்கள் தொடர வேண்டும். தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் பாகுபாடில்லாமல் திமுகவை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய வேண்டும். அன்புமணி ராமதாஸ்- ராமதாஸ் பிரச்சினையின் பின்னணியில் பாஜக இல்லை” என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயிலில் செய்யப்பட்டு வரும் வெள்ளித் தேர் திருப்பணிக்காக ஒரு கிலோ வெள்ளியை திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் செல்லையாவிடம் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: “திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் செய்யப்படும் வெள்ளித்தேருக்கு பக்தர்களால் 175 கிலோவுக்கு மேலாக உபயமாக வெள்ளி கொடுக்கப்பட்டுள்ளது.
நானும் ஒரு கிலோ வெள்ளி கொடுத்துள்ளேன். தமிழக அமைச்சராக இருந்தபோது இத்திருக்கோயிலில் திருப்பணிகளை மேற்கொள்ள அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அனுமதி அளித்தார். திருப்பணிக்குப்பின் 2004-ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. நெல்லையப்பர் கோயிலுக்கு புதிய யானை வாங்குவது தொடர்பாக உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வரிடம் பேசப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டுதல்படி புதிய யானை வாங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவரும் ஒன்று சேர வேண்டும். பாஜக கூட்டணியில் அவர்கள் தொடர வேண்டும். தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் பாகுபாடில்லாமல் திமுகவை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய வேண்டும். அன்புமணி ராமதாஸ்- ராமதாஸ் பிரச்சினையின் பின்னணியில் பாஜக இல்லை. பாஜக- அதிமுக கூட்டணி உடைந்து விடும் என்பது திருமாவளவனின் எண்ணம். ஆனால் திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என்பது எனது விருப்பம்.
வரும் 2026 சட்டப் பேரவை தேர்தலில் கூட்டணியை நம்பி மட்டுமே முதல்வர் களத்தில் இருக்கிறார். தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த பெரும்பாலான திட்டங்களை முதல்வர் நிறைவேற்றவில்லை. சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவற்றால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக அரசின் மீதமுள்ள 10 மாத காலத்தில் மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்த கணக்கீடு செய்யவில்லை என்றால் வரவுள்ள எங்களது ஆட்சியில் அத்திட்டம் நிறைவேற்றப்படும்.
ஒவ்வொரு புதிய திட்டம் கொண்டு வரும்போதும் பல்வேறு எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆதார் அட்டை கொண்டு வந்த போதும் பல சிக்கல்கள் இருப்பதாக சொல்லப்பட்டது. தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. அதுபோலவே நகை கடன் பெறுவதற்கான விதிமுறைகளும் சிக்கல்கள் இல்லாமல் நடைமுறைக்கு வரும்" இவ்வாறு அவர் கூறினார்.