அரக்கோணம்: கல்லூரி மாணவிக்கு ஆதரவாகவும், திமுக அரசைக் கண்டித்தும் அரக்கோணத்தில் அதிமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த காவனூரைச் சேர்ந்தவர் தெய்வா (எ) தெய்வச்செயல்(40). அரக்கோணம் மத்திய ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர். அரக்கோணம் அடுத்த பரித்திபுத்தூரைச் சேர்ந்தவர் ப்ரீத்தி(21). கல்லூரி மாணவி.ஏற்கெனவே திருமணமான இவர், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து வாழ்கிறார்.
இந்நிலையில், ப்ரீத்தியை சில மாதங்களுக்கு முன்பு தெய்வா சந்தித்து, அவரைக் காதலிப்பதாகவும், திருமணம் செய்ய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கடந்த ஜன. 30-ம் தேதி அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இருவரும் அரக்கோணத்தில் வசித்து வந்தனர்.
சில நாட்களுக்கு முன்பாக அரக்கோணம் மகளிர் காவல் நிலையத்தில் ப்ரீத்தி, கணவர் தெய்வா மீது புகார் அளித்தார். அதில், தெய்வா ஏற்கெனவே திருமணமானவர் என்றும், பல பெண்களுடன் அவருக்குத் தொடர்பு உள்ளதாகவும், தன்னை அடித்து துன்புறுத்தி, சில திமுக நிர்வாகிகளின் விருப்பத்துக்கு இணங்குமாறு வற்புறுத்துவதாக புகாரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், தனது புகார் மீது போலீஸார் முறையாக விசாரணை நடத்தவில்லை என்ற ப்ரீத்தியின் குற்றச்சாட்டு சமூகவலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், தெய்வாவை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்குவதாக திமுக இளைஞரணிச் செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், ப்ரீத்திக்கு ஆதரவாகவும், திமுக அரசைக் கண்டித்தும் அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி அதிமுகவினர் போலீஸில் மனு அளித்தனர்.
ஆனால், போலீஸார் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி அளிக்கவில்லை. எனினும், தடையை மீறி அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தார். தொடர்ந்து, இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வலியுறுத்தி, கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதிமுகவினர் மனு அளித்தனர்.
தெய்வச்செயலுக்கு முன்ஜாமீன்: இதற்கிடையில், தெய்வச்செயல் மற்றும் அவரது மனைவி ஆகியோர் முன்ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், “அதிமுகவினரின் தூண்டுதல் காரணமாகவே சம்பந்தப்பட்ட மாணவி தவறான குற்றச்சாட்டை கூறியுள்ளார். எனவே, எங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கோரியிருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி என்.செந்தில்குமார் இருவருக்கும் நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு - சென்னை: அரக்கோணம் விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: திமுக இளைஞரணி நிர்வாகி மீதான குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மை மற்றும் குற்றம் சாட்டப்பட்டவரின் அரசியல் தொடர்புகளைக் கருத்தில் கொண்டு, தேசிய மகளிர் ஆணையத் தலைவர், உடனடியாக பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணையை வலியுறுத்தி தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பை உறுதி செய்தல், சுதந்திரமான விசாரணைக் குழுவை அமைத்தல், எந்த அரசியல் தலையீட்டையும் தடுத்து பிஎன்எஸ் சட்ட விதிகளின் கீழ் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். மேலும், மூன்று நாட்களுக்குள் முதல் தகவல் அறிக்கை நகலுடன், விரிவான மேல்நடவடிக்கை குறித்த விவரத்தையும் அனுப்புமாறு டிஜிபியை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.