சென்னை: ‘‘கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று, தமிழகத்துக்கான நிதியைப் போராடிப் பெறுவேன்’’ என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நிதி ஆயோக் அமைப்பின் 9-வது நிர்வாகக் குழு கூட்டம் மே 24-ம் தேதி நடைபெறுகிறது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கிறார். இதற்காக அவர் நாளை மாலை டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். இதற்கிடையில் முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணத்தை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலளித்து, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவு: தமிழகத்துக்கான நியாயமான நிதி உரிமையை நிதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ம் தேதி டெல்லி செல்கிறேன். சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது.
"பாஜகவுடன் கூட்டணி கிடையாது" என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் 'புலிகேசி'யாக மாறி வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா?
இந்த ஸ்டாலினின் கை கருப்பு சிவப்புக் கழகக் கொடியை ஏந்தும் கை. பேரறிஞரால் தூக்கிவிடப்பட்ட கை. கலைஞரின் கரம் பற்றி நடந்த கை. எந்நாளும் உரிமைக் கொடியைத்தான் ஏந்துவேன். ஊர்ந்து போகமாட்டேன். இன்றைக்குக் கூட, தமிழகத்தின் உரிமைக்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன். கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன. தமிழகத்துக்கான நிதியைப் போராடிப் பெறுவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.