தமிழகம்

குற்றவாளிகள் மட்டும் வழுக்கி விழுவது எப்படி? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக காவல் நிலைய கழிவறைகள் குற்றவாளிகள் மட்டும் வழுக்கி விழும் வகையில் உள்ளதா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவருக்கு கை, கால் முறிவுக்கு சிகிச்சை வழங்கக் கோரி, அவரது தந்தை இப்ராஹிம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘கைது செய்யப்பட்ட நபருக்கு எவ்வாறு காயம் ஏற்பட்டது?’ என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர், ‘கழிவறையில் வழுக்கி விழுந்ததால் காயம் ஏற்பட்டது. அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: காவல் நிலையங்களில் உள்ள கழிவறைகள் குற்றவாளிகள் மட்டும் வழுக்கி விழுந்து காயம் ஏற்படும் வகையில் உள்ளதா? அந்த கழிவறைகளை ஆய்வாளர்கள் பயன்படுத்துவதில்லையா? அவர்களுக்கு எதுவும் ஆவதில்லையே, ஏன்? இதுபோன்ற செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இவ்வாறு நடந்தால் சம்பந்தப்பட்ட காவலர்கள் பணியை இழக்கும் நிலை ஏற்படும். மனுதாரரின் மகனுக்கு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்க சிறைத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT