தமிழகம்

சென்​னை​யில் 4 வார்​டு​க்கு விரை​வில் இடைத்​தேர்​தல்: ஒரு லட்​சம் பேர் வாக்​களிக்​கின்​றனர்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள 4 வார்டுகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க உள்ளனர்.

தமிழகம் முழுவதும் 35 மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில் 133 மக்கள் பிரதிநிதி பதவிகள் காலியாக உள்ளன. மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 315 உள்ளாட்சி பிரதிநிதி பதவிகள் காலியாக உள்ளன.

உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் உள்ள 417 இடங்களுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. அதற்கான விரிவான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியில் ராயபுரம் மண்டலத்தில் 59-வது வார்டு, தேனாம்பேட்டை மண்டலம் 122-வது வார்டு, வளசரவாக்கம் மண்டலம் 146-வது வார்டு, ஆலந்தூர் மண்டலம் 165-வது வார்டு ஆகியவற்றில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மறைவையொட்டி, அந்த 4 வார்டுகளும் காலியானதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. இவற்றுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த 4 வார்டுகளுக்கான வாக்காளர் பட்டியலை மாநகராட்சி கூடுதல் ஆணையர் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டார். அப்போது, மாநகராட்சி துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி) பிரதிவிராஜ், மாநகர வருவாய் அலுவலர் கே.பி.பானுசந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

வரும் இடைத்தேர்தலில் சென்னையில் மொத்தம் 98 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அவற்றில் 1,02160 பேர் வாக்களிக்க உள்ளனர்.

SCROLL FOR NEXT