சென்னை: பச்சை தடத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், பரங்கிமலை - சென்னை சென்ட்ரல் பாதையில் மெட்ரோ ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால், பயணிகள் 40 நிமிடம் சிரமத்தை சந்தித்தனர்.
சென்னையில், விமான நிலையம் - விம்கோ நகர் வரையும், பரங்கிமலை - சென்னை சென்ட்ரல் வரையும் என இரு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். காலை, மாலை வேளைகளில் பீக் ஹவர்சில் மெட்ரோ ரயில்களில் கூட்டம் நிரம்பிவழியும். மேலும், இந்த நேரங்களில் மெட்ரோ ரயில் நிலையங்களும் பரபரப்பாக காணப்படும்.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல் - பரங்கிமலை வரையிலான (பச்சை தடம்) வழித்தடத்தில் நேற்று காலை 9 மணிக்கு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, இந்த பாதையில் மெட்ரோ ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
உடனே தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் மெட்ரோ ரயில் நிறுவன பொறியாளர்கள் ஈடுபட்டனர். சுமார் 40 நிமிடங்கள் போராடி தொழில்நுட்பக் கோளாறை பொறியாளர்கள் சரிசெய்தனர். இதன்பிறகு, மெட்ரோ ரயில்கள் நேற்று காலை 9.40 மணிமுதல் வழக்கம் போல இயங்கத் தொடங்கியன. ஒரு வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால், பயணிகள் சிரமத்தை சந்தித்தனர்.