சென்னை: வடசென்னை பகுதியில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகளை மீண்டும் தொடங்க கோரி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு கலாநிதி வீராசாமி எம்.பி. கடிதம் அனுப்பியுள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: கரோனா பெருந்தொற்று காலத்துக்கு முன்பு மணலி புதுநகர் பகுதியில் இருந்து 28-ஏ, 121-டி, 56-ஜே ஆகிய வழித்தட எண்களை கொண்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. வேலைக்கு செல்லும் பொதுமக்கள், மருத்துவமனைகளுக்கு செல்வோர் உட்பட அத்தியாவசிய பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் இது வசதியாக இருந்தது.
தற்போது இந்த பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இத்துடன் திருவொற்றியூர், எண்ணூர், தண்டையார்பேட்டை பணிமனையில் இருந்து நிறுத்தப்பட்ட பேருந்து சேவையையும் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.