சென்னை: ‘‘தமிழக ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், மத்திய அரசின் தமிழக விரோதப் போக்கை கண்டித்தும் வரும் 25-ம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்’’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்ட அறிக்கை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல் சாசன மாண்புக்கு விரோதமாகவும், தமிழக மக்களின் நலன்களுக்கு விரோதமாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காததை உச்சநீதிமன்றம் கடுமையாகக் கண்டித்ததுடன் உச்சநீதிமன்றமே மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது.
அரசியல் சாசனத்துக்கு விரோதமாக செயல்பட்டு வரும் ஆளுநரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக மக்களும், ஜனநாயக இயக்கங்களும் தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றனர். அதேபோன்று, மத்திய அரசு தமிழகத்தையும், தமிழக மக்களையும் தொடர்ந்து வஞ்சித்து துரோகமிழைத்து வருகிறது.
தமிழகத்துக்கு உரிய வரிப் பங்கீட்டை ஒதுக்க மறுப்பது, கல்விக்கான நிதி ஒதுக்க மறுப்பது, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மறுப்பது, 100 நாள் வேலைத் திட்டத்துக்கான நிதியை நிலுவை வைப்பது, தேசிய கல்விக் கொள்கையைத் திணிப்பது ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறது.
அத்துடன், தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பது, கல்வி, ரயில்வே, சுகாதாரம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யாதது போன்ற தமிழக விரோதப் போக்கை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.
இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டுமெனவும், தமிழகத்துக்கு 100 நாள் வேலைத் திட்டத்துக்காக வழங்க வேண்டிய ரூ. 3,796 கோடி பாக்கித் தொகையை உடனடியாக விடுவிக்கவும், சமக்ரா ஷிக்ஷா அபியான் எனப்படும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கான பள்ளிக் கல்வி நிதி ரூ.2,152 கோடியை வழங்கிடவும், நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்த மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகையை உடனடியாக அமல்படுத்திடவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 25-ம் தேதியன்று சென்னையில் சாஸ்திரி பவன் முன்பு மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.