சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டபோது அதிகாரிகள் துன்புறுத்தப்பட்டதாக பொய்யான தகவல்களை கூறி இந்த விவகாரத்தை திசை திருப்ப முயல்வதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 6-ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் மற்றும் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் இன்று (ஏப்.17) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ தனது வாதத்தை தொடர்ந்தார்.
அவரது வாதத்தில், “சோதனையின்போது பெண் அதிகாரிகள் யாரும் இரவில் தங்கவைக்கப்படவில்லை. ஒரு சில ஆண் அதிகாரிகள் மட்டுமே மூன்று நாட்களும் தலைமை அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த சோதனையின்போது டாஸ்மாக் அதிகாரிகளுக்கோ அல்லது அலுவலக உடமைகளுக்கோ எந்த சேதமும் ஏற்படுத்தவில்லை. இதனை எல்லாம் ஒப்புக்கொண்டு அதிகாரிகள் பஞ்சநாமாவில் கையெழுத்துட்டுள்ளனர்.
மேலும், அமலாக்கத் துறை சார்பில் பெண் அதிகாரிகள், இச்சோதனையின் போது இருந்தனர். டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட போது அதிகாரிகள் துன்புறுத்தப்பட்டதாக பொய்யான தகவல்களை கூறி இந்த விவகாரத்தை திசைத் திருப்ப முயல்கின்றனர். எதற்காக வந்திருக்கிறோம் என்ற தகவலை டாஸ்மாக் நிறுவனத் தலைவர் மற்றும் மேலாளரிடம் தெரிவித்த பின்னரே சோதனை தொடங்கப்பட்டது. அனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டதோடு போதிய ஓய்வும் அளிக்கப்பட்டது.
நள்ளிரவில் பெண் ஊழியர்கள் யாரும் அனுப்பப்படவில்லை. அவர்களின் பாதுகாப்பு கருதி முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டனர். சோதனையின்போது யாருடைய அந்தரங்க உரிமையும் பாதிக்கப்படவில்லை” என்று அவர் வாதிட்டார். அமலாக்கத் துறை தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், டாஸ்மாக் தரப்பு பதில் வாதத்துக்காக வழக்கு ஏப்ரல் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.