தமிழகம்

‘அம்​ரித் பாரத்’ திட்​டத்​தின்கீழ் மேம்படுத்திய ரயில் நிலையங்களை 19-ல் பிரதமர் திறந்து வைக்கிறார்

செய்திப்பிரிவு

சென்னை: ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மேம்படுத்தப்பட்ட 50-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ஏப்.19-ம் தேதி காணொலி வாயிலாக திறந்துவைக்க உள்ளார்.

ரயில்வேயில் ‘அம்ரித் பாரத்’ என்ற புதிய திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக, 508 ரயில் நிலையங்களை ரூ.24,470 கோடியில் மேம்படுத்தும் பணிகள் கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, தெற்கு ரயில்வேயில், சென்னை கடற்கரை, பூங்கா, மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, பெரம்பூர், அம்பத்தூர், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, ஜோலார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, சூலுார்பேட்டை, திரிசூலம், குரோம்பேட்டை உட்பட 40-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், நாடு முழுவதும் மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்த 50-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ஏப்.19-ம் தேதி காணொலி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். இதில், தெற்கு ரயில்வேயில், மேம்பாட்டுப் பணிகள் முடிவடைந்த பரங்கிமலை, சூலுார்பேட்டை, சாமல்பட்டி, சிதம்பரம், மன்னார்குடி, போளூர், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, விருத்தாசலம் உட்பட 13 ரயில் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தும் வகையில், ‘அம்ரித் பாரத்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ், முதல் கட்டமாக தெற்கு ரயில்வேயில், 13 ரயில் நிலையங்களை பயணிகளின் பயன்பாட்டுக்கு பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

மின்தூக்கி, நடைமேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், நுழைவாயில்கள் சீரமைப்பு, நகரும் படிக்கட்டுகள், மல்டி லெவல் பார்க்கிங், ‘சிசிடிவி’ கேமரா உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதேபோல், கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு தடத்தில் முதல் ‘ஏசி’ மின்சார ரயில் சேவையையும் தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது இவ்வாறு அவர்கள் கூறினார்.

SCROLL FOR NEXT