தமிழகம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றச்சாட்டுகள் குறித்து 9 பேரிடம் நீதிபதி கேள்வி

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரிடம் குற்றச்சாட்டுகள் குறித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி பல்வேறு கேள்விகளை கேட்டார்.

பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டபெண் 2019-ல் போலீஸில் புகார் அளித்தார். இதன்பேரில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஹேரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. கோவை மகளிர் நீதிமன்றத்தில் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இதனிடையே, அரசு தரப்பு மற்றும் எதிர்தரப்பு சாட்சி விசாரணை முடிந்தது. சாட்சி விசாரணை குறித்து கேள்வி கேட்க 9 பேரும் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். சேலம் மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் அழைத்து வரப்பட்டனர். குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 313-ன் கீழ் நீதிபதி நந்தினிதேவி, சாட்சி விசாரணையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து 9 பேரிடம் கேள்விகளை கேட்டார். தொடர்ந்து, வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 9-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். பின்னர் 9 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உதவி ஆணையர் கணேசன், ஆய்வாளர் அர்ஜுன்குமார் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த வழக்கு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதால், விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT