சென்னை: ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளி்ன் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதி்த்து உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவை, உயர் நீதிமன்றம் இன்று விசாரிக்கவுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மலை வாசஸ்தலங்களான ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்கள் கூட்டாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
அதன்படி, ஊட்டிக்கு வார நாட்களில் தினமும் 6 ஆயிரம் வாகனங்களுக்கும், வார இறுதி நாட்களில் தினமும் 8 ஆயிரம் வாகனங்களுக்கும் மட்டுமே இ-பாஸ் வழங்க வேண்டும் என்றும், அதேபோல, கொடைக்கானலில் வார நாட்களில் தினமும் 4 ஆயிரம் வாகனங்களுக்கும், வார இறுதி நாட்களில் தினமும் 6 ஆயிரம் வாகனங்களுக்கும் மட்டுமே அனுமதி வேண்டும் என்றும், இ-பாஸ் இல்லாமல் எந்த வாகனங்களையும் அனுமதிக்கக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
கொடைக்கானல், ஊட்டிக்கு விதிக்கப்பட்ட வாகன கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊட்டியில் நேற்று உள்ளூர் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் வாகனக் கட்டுப்பாடு தொடர்பான உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பதை ஐஐடி, ஐஐஎம் நிபுணர்களின் ஆய்வுக்குப் பிறகு முடிவுசெய்து கொள்ளலாம். கோடை விடுமுறைக்காக விதிக்கப்பட்டுள்ள இந்த வாகனக் கட்டுப்பாடுகளால் உள்ளூர் வணிகர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும், எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் முன்பாக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞரான ஜெ. ரவீந்திரன் முறையீடு செய்தார். அதையடுத்து நீதிபதிகள், இந்த மனுவை இன்று விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.